வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 8 பேர் பலி


வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 8 பேர் பலி
x
தினத்தந்தி 6 Aug 2020 5:44 PM GMT (Updated: 6 Aug 2020 5:44 PM GMT)

வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

வேலூர் சத்துவாச்சாரி 1-வது பகுதி 9-வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 80). இவர் கடந்த மாதம் 31-ந் தேதி கொரோனா தொற்று சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை முதியவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்பாடி தாலுகா சாந்திகிராமத்தை சேர்ந்தவர் ராஜகம்பீரம். இவருடைய மனைவி அக்னஸ் (70) கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

முதியவர்கள்

இதேபோன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம் மாவட்டம் அம்பேத்கர்நகரை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ராஜேஸ்வரி (70) கடந்த மாதம் 23-ந் தேதியும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஷாஜகான் (80) நேற்று முன்தினமும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜேஸ்வரி, ஷாஜகான் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தனர்.

ஆரணி, பாரதியார் தெரு பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பத்தியவாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (60). அவர் கடந்த 31-ந் தேதி கொரோனா அறிகுறியால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த உயிரிழந்தார்.

தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சீதா (55). இவர் உடல்நல குறைவால் கடந்த சிலநாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அன்றே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆரணியை சேர்ந்தவர் மணி (60). இவர் உடல் நலக்குறைவால் கடந்த ஜூலை 27-ந் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 8 பேரின் உடல்களும் அரசின் விதிமுகைளின்படி அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story