திருவானைக்காவலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: பதற்றம்-போலீசார் குவிப்பு


திருவானைக்காவலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: பதற்றம்-போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 12:24 AM GMT (Updated: 7 Aug 2020 12:24 AM GMT)

திருவானைக்காவலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஸ்ரீரங்கம், 

திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 21). கூலித்தொழிலாளியான இவர் நேற்று பகல் மேலகொண்டையம்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் இந்த வழியாக செல்லக்கூடாது என மிரட்டியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மாலை அங்குள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், சந்தோசை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த சந்தோசின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் பவன்குமார்ரெட்டி, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் மணிகண்டன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அரிவாளால் வெட்டிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், தொடர்ச்சியாக இந்த தெருவில் செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story