அரியலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா: பெரம்பலூரில் 4 பேர் பாதிப்பு


அரியலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா: பெரம்பலூரில் 4 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 1:15 AM GMT (Updated: 7 Aug 2020 1:15 AM GMT)

அரியலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், திருமானூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 3 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், தா.பழூர், ஆண்டிமடம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,154 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 925 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 297 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் விநாயகர் தெருவை சேர்ந்த 27 வயது பெண், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் நடுத்தெருவை சேர்ந்த 53 வயது பெண், ஆலத்தூர் தாலுகா ஜமீன்பேரையூர் மேலத் தெருவை சேர்ந்த 67 வயது ஆண், ஜமீன் ஆத்தூர் என்.ஆர்.நகரை சேர்ந்த 30 வயது பெண் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story