கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 101 பேர் பலி மொத்த பாதிப்பு 1.64 லட்சத்தை தாண்டியது


கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 101 பேர் பலி மொத்த பாதிப்பு 1.64 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 7 Aug 2020 8:34 PM GMT (Updated: 7 Aug 2020 8:34 PM GMT)

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 101 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இதுவரை வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.64 லட்சத்தை தாண்டியது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் தினமும் 100 பேர் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்து வருகிறார்கள். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 254 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 2 ஆயிரத்து 897 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 101 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

6,670 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 58 ஆயிரத்து 254 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 6,670 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 924 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 84 ஆயிரத்து 232 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 3,951 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 77 ஆயிரத்து 686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் பெங்களூரு நகரில் 2,147 பேருக்கும், மைசூருவில் 242 பேருக்கும், கலபுரகியில் 271 பேருக்கும், தார்வாரில் 266 பேருக்கும், பல்லாரியில் 684 பேருக்கும், கொப்பலில் 173 பேருக்கும், தட்சிணகன்னடாவில் 166 பேருக்கும், பாகல்கோட்டையில் 148 பேருக்கும், உடுப்பியில் 246 பேருக்கும், உத்தரகன்னடாவில் 120 பேருக்கும், பெலகாவியில் 390 பேருக்கும், விஜயாப்புராவில் 143 பேருக்கும், துமகூருவில் 76 பேருக்கும், மண்டியாவில் 102 பேருக்கும், ராய்ச்சூரில் 171 பேருக்கும், பீதரில் 84 பேருக்கும், தாவணகெரேயில் 111 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 119 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 64 பேருக்கும், கோலாரில் 88 பேருக்கும், சிவமொக்காவில் 151 பேருக்கும், குடகில் 27 பேருக்கும், சித்ரதுர்காவில் 57 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 63 பேருக்கும், ஹாசனில் 138 பேருக்கும், சிக்கமகளூருவில் 65 பேருக்கும், யாதகிரியில் 70 பேருக்கும், ராமநகரில் 93 பேருக்கும், ஹாவேரியில் 90 பேருக்கும், கதக்கில் 105 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

101 பேர் பலி

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 101 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் 22 பேரும், மைசூருவில் 15 பேரும், தட்சிண கன்னடா, கலபுரகியில் தலா 7 பேரும், தார்வார் மற்றும் ஹாசனில் தலா 9 பேரும், பல்லாரி மற்றும் உடுப்பியில் தலா 5 பேரும், கோலார் மற்றும் கொப்பலில் தலா 3 பேரும், பெலகாவி, ராய்ச்சூர், தாவணகெரே, கதக், சிக்கமகளூருவில் தலா 2 பேரும், சிவமொக்கா, ஹாவேரி, பீதர், யாதகிரி, சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மட்டும் 69 ஆயிரத்து 572 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 1,200 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story