ராசிபுரம் அருகே அத்தை வெட்டிக்கொலை; முதுகலை பட்டதாரி கைது


ராசிபுரம் அருகே அத்தை வெட்டிக்கொலை; முதுகலை பட்டதாரி கைது
x
தினத்தந்தி 8 Aug 2020 1:21 AM GMT (Updated: 8 Aug 2020 1:21 AM GMT)

ராசிபுரம் அருகே அத்தையை வெட்டிக் கொலை செய்த முதுகலை பட்டதாரி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது பெரியப்பா மற்றும் வியாபாரிக்கும் வெட்டு விழுந்தது.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாலப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் உப்பிலிய நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அஞ்சலம். இவர்களுக்கு மதியழகன், கோடீஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதியழகன் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது மனைவியுடன் திருச்சியில் வசித்து வருகிறார். 2-வது மகன் கோடீஸ்வரன் (வயது 30) முதுகலை பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. வேலையின்றி இருந்து வந்தார். தற்போது கோடீஸ்வரன் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

கோடீஸ்வரன் வீட்டின் அருகில் அவரது பெரியப்பா பெரியண்ணன் (75) மற்றொரு வீட்டில் அவரது அத்தைகள் லட்சுமி (60), தங்கம்மாள் ஆகியோர் தனித்தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை மனவிரக்தி அடைந்த கோடீஸ்வரன் செல்போனை கீழே போட்டு உடைத்துள்ளார்.

பின்னர் அவர் திடீரென்று கொடுவாளை எடுத்துக்கொண்டு அந்த தெருவில் உள்ள வீடுகளின் கதவை வெட்டினார். தொடர்ந்து அவரது வீட்டின் அருகில் படுத்திருந்த அவரது பெரியப்பா பெரியண்ணனை வெட்டினார். பின்னர் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வேப்பமரத்தடியில் இருந்த மூத்த அத்தை லட்சுமியை கொடுவாளால் பயங்கரமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த லட்சுமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

அப்போது ராசிபுரத்தை சேர்ந்த நரேஷ்குமார் (30) என்ற வியாபாரி அந்த வழியாக வந்தார். அவரையும் கொடுவாளால் கோடீஸ்வரன் வெட்டிவிட்டு அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து உள்தாழிட்டு பதுங்கி கொண்டார். படுகாயம் அடைந்த பெரியண்ணன், நரேஷ்குமார் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டு கதவை உடைத்து பதுங்கியிருந்த கோடீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதுகலை பட்டம் பெற்ற கோடீஸ்வரன் வேலை கிடைக்காமல் இருந்து வந்ததும், அவர் வெளிநாடு செல்ல நினைத்து அதற்காக நாமக்கல்லை சேர்ந்த ஒருவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்து இருந்ததாகவும், ஆனால் பணம் வாங்கிய நபர் வெளிநாடு செல்ல எந்த ஏற்பாடும் செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் அவர் மனவிரக்தி அடைந்து பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.


Next Story