சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி


சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி
x
தினத்தந்தி 8 Aug 2020 1:53 AM GMT (Updated: 8 Aug 2020 1:53 AM GMT)

சேலத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் சேலத்தில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இந்த நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவர் கடந்த 5-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதன்பின்னர் தான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.


Next Story