பல்லடத்தில் பெண்ணை குத்திக்கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர்


பல்லடத்தில் பெண்ணை குத்திக்கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர்
x
தினத்தந்தி 8 Aug 2020 5:01 AM GMT (Updated: 8 Aug 2020 5:01 AM GMT)

மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள தாம்பத்தியத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது44). இவரது மனைவி அருள்மணி (38) இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக திருப்பூரில் பனியன் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் சம்பந்தமாக குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அடிக்கடி என்னை தொந்தரவு பண்ண வேண்டாம் என அருள்மணி கூறியுள்ளார். இதனைப் பொருட்படுத்தாமல் அடிக்கடி மாடசாமி தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தைகளை கரைப்புதூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அருள்மணி அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மாடசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி அருள்மணியின் மார்பு மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்திய நிலையில் அருள்மணி இறந்து விட்டார்.

கோபத்தில் இப்படி செய்துவிட்டோமே என வருந்திய மாடசாமி தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் கத்தி சரியாக வெட்டவில்லை. இதனால் வீட்டில் வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்றுகாலை பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவுக்காரப்பெண் சவுமியா, இவர்கள் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி உள்ளார். கதவு திறந்திருந்த நிலையில் உள்ளே எட்டிப்பார்த்த போது ரத்தம் சிந்தி கிடந்ததை கண்டு அலறி ஓடி வந்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருள்மணி உடலை கைப்பற்றி பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கழுத்தில் காயங்களுடன் மயங்கிக்கிடந்த மாடசாமியை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story