மழையால் குடகில் பெரிய அளவில் பாதிப்பு கலெக்டருடன், எடியூரப்பா பேச்சு மக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு


மழையால் குடகில் பெரிய அளவில் பாதிப்பு கலெக்டருடன், எடியூரப்பா பேச்சு மக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு
x
தினத்தந்தி 8 Aug 2020 10:47 PM GMT (Updated: 8 Aug 2020 10:47 PM GMT)

குடகில் கனமழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, மக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட மலைவாழ் மாவட்டங்களும், கடலோர மாவட்டங்களும், வடகர்நாடக மாவட்டங்களும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக குடகு மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி அர்ச்சகர் உள்பட 5 பேரின் கதி என்ன? என்பதே தெரியாமல் உள்ளது. தொடர் மழை, நிலச்சரிவு காரணமாக மீட்பு பணிகள் கூட நடைபெறவில்லை. 2 நாட்களுக்கு பின்பு நேற்று தான் மீட்பு பணிகள் தொடங்கி உள்ளது. குடகு மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது.

கலெக்டருக்கு உத்தரவு

இந்த நிலையில், குடகு மாவட்ட கலெக்டர் அனீஷ் கண்மணி ஜாயுடன், கொரோனா பாதிப்பால் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்-மந்திரி எடியூரப்பா செல்போனில் தொடர்பு கொண்டு நேற்று காலையில் பேசினார். அப்போது குடகில் மழை பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, மீட்பு பணிகள் நடைபெறுகிறதா?, மக்கள் பாதுகாப்பாக உள்ளார்களா?, என்பது உள்ளிட்ட விவரங்களை மாவட்ட கலெக்டரிடம் கேட்டு முதல்-மந்திரி எடியூரப்பா அறிந்து கொண்டார். அதே நேரத்தில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், நிவாரண பணிகளை மேற்கொள்ள தலைமை செயலாளரிடம் பேசி பணம் பெற்றுக் கொள்ளும்படியும் கலெக்டரிடம் எடியூரப்பா கூறியுள்ளார்.

மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா குடகில் முகாமிட்டு இருப்பதால், அவருடன் சேர்ந்து பணியாற்றும்படியும், நிவாரண பணிகளை மேற்கொள்ள என்.டி.ஆர்.எப் மற்றும் எஸ்.டி.ஆர்.எப் படைகள் கூடுதலாக வேண்டும் என்றால் பெற்றுக் கொள்ளும்படியும், மீட்பு பணிகள் தாமதம் இன்றி நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அரசு தயாராக இருப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மழையால் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மாவட்ட கலெக்டர் அனீஷ் கண்மணி ஜாய்க்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். 

Next Story