கர்நாடகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு ஒரேநாளில் 7,178 பேருக்கு வைரஸ் தொற்று 93 பேர் உயிரிழப்பு


கர்நாடகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு ஒரேநாளில் 7,178 பேருக்கு வைரஸ் தொற்று 93 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 10:58 PM GMT (Updated: 8 Aug 2020 10:58 PM GMT)

கர்நாடகத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 7,178 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 93 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் 5 ஆயிரம் பேர் குணமாகி வீடு திரும்பினர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அது கடந்த 2 நாட்களாக 6 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. அத்துடன் தினமும் 100 பேர் சராசரியாக கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்து வருகிறார்கள். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 64 ஆயிரத்து 924 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 2 ஆயிரத்து 998 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 93 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

7,178 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 64 ஆயிரத்து 924 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 7,178 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 102 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 89 ஆயிரத்து 238 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 5 ஆயிரத்து 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 79 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரேநாளில் பெங்களூரு நகரில் 2,665 பேருக்கும், மைசூருவில் 138 பேருக்கும், கலபுரகியில் 261 பேருக்கும், தார்வாரில் 261 பேருக்கும், பல்லாரியில் 607 பேருக்கும், கொப்பலில் 163 பேருக்கும், தட்சிணகன்னடாவில் 194 பேருக்கும், பாகல்கோட்டையில் 149 பேருக்கும், உடுப்பியில் 313 பேருக்கும், உத்தரகன்னடாவில் 117 பேருக்கும், பெலகாவியில் 302 பேருக்கும், விஜயாப்புராவில் 143 பேருக்கும், துமகூருவில் 177 பேருக்கும், மண்டியாவில் 101 பேருக்கும், ராய்ச்சூரில் 295 பேருக்கும், பீதரில் 47 பேருக்கும், தாவணகெரேயில் 132 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 66 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 66 பேருக்கும், கோலாரில் 57 பேருக்கும், சிவமொக்காவில் 73 பேருக்கும், குடகில் 22 பேருக்கும், சித்ரதுர்காவில் 63 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 62பேருக்கும், ஹாசனில் 133 பேருக்கும், சிக்கமகளூருவில் 89 பேருக்கும், யாதகிரியில் 200 பேருக்கும், ராமநகரில் 93 பேருக்கும், ஹாவேரியில் 95 பேருக்கும், கதக்கில் 94 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

93 பேர் பலி

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 93 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் 18 பேரும், மைசூருவில் 10 பேரும், பல்லாரியில் 9 பேரும், கலபுரகியில் 7 பேரும், தார்வார், தட்சிண கன்னடா, ஹாசனில் தலா 6 பேரும், உடுப்பியில் 5 பேரும், சாம்ராஜ்நகரில் 3 பேரும், ராய்ச்சூர், யாதகிரி, துமகூரு, தாவணகெரே, ஹாவேரி, ராமநகர், சிக்கமகளூரு, பீதர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், பெலகாவி, கொப்பல், விஜயாப்புரா, மண்டியா, கதக், சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகி உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

பெங்களூருவில் மட்டும் 72 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 1,218 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் புதிய உச்சமாக நேற்று 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story