ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Aug 2020 1:34 AM GMT (Updated: 9 Aug 2020 1:34 AM GMT)

ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி, 

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூத்தபேடு, ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் சின்னையா. கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சுவர்ணா. இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் கோபி, வளசரவாக்கம் மண்டல வார்டு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

சின்னையா-சுவர்ணா தம்பதிக்கு யாமினி(வயது 17) என்ற மகளும் இருந்தார். அவர், அருகில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தற்போது பிளஸ்-2 படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பிளஸ்-2 கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

புதிய செல்போன்

எனவே ஆன்லைன் மூலம் கல்வி கற்க தனக்கு புதிய செல்போன் வாங்கித்தரும்படி யாமினி தனது பெற்றோர் மற்றும் அண்ணனிடமும் கேட்டார். அவர்களும், இன்னும் 2 நாட்களில் வாங்கி தருவதாக கூறி இருந்தனர்.

அதுவரை தனது சித்தியின் செல்போனை ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்தி படித்து வந்தார். ஆனால் அவரது செல்போனுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்ததால் யாமினியால் ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் ஆன்லைன் வகுப்புக்கு தனது பெற்றோர் செல்போன் வாங்கி தரவில்லையே என விரக்தி அடைந்த யாமினி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவரது பெற்றோர், யாமினி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் யாமினியுடன் படித்த சக மாணவிகள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதுபற்றி ராயலாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story