ராயக்கோட்டை அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


ராயக்கோட்டை அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 9 Aug 2020 10:15 PM GMT (Updated: 10 Aug 2020 2:02 AM GMT)

ராயக்கோட்டை அருகே திருமணமான 4 ஆண்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராயக்கோட்டை, 

சூளகிரி ஒன்றியம் கோபசந்திரத்தை சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகள் விஜயசாந்தி (வயது 22). இவருக்கும், ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளாரி அக்ரஹாரத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் கிருஷ்ணன் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்ஷா என்ற 3 வயது பெண் குழந்தையும், ஜெகதீஷ் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

திருமணத்தின் போது விஜயசாந்திக்கு அவரது பெற்றோர் 10 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயசாந்தியிடம், அவருடைய மாமியார் மங்கம்மாள், அடிக்கடி பெற்றோர் வீட்டில் சென்று நகை, பணம் வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் கடந்த ஒரு ஆண்டாக விஜயசாந்தியை அவரது பெற்றோரை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயசாந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் திருமணம் ஆகி 4 ஆண்டில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் குணசேகரனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story