12 வயதுக்கு உட்பட்ட 15,113 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று 16 மாவட்டங்களில் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது


12 வயதுக்கு உட்பட்ட 15,113 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று 16 மாவட்டங்களில் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 12 Aug 2020 12:28 AM GMT (Updated: 12 Aug 2020 12:28 AM GMT)

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 12 வயதுக்கு உட்பட்ட 15,113 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 65 ஆயிரத்து 490 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,377 ஆண்கள், 2,457 பெண்கள் என மொத்தம் 5,834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 230 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 690 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 986 பேரும், செங்கல்பட்டில் 388 பேரும், திருவள்ளூரில் 362 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 8 பேரும், நீலகிரியில் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 32 லட்சத்து 40 ஆயிரத்து 339 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த பட்டியலில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 156 ஆண்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 464 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 15 ஆயிரத்து 113 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 38 ஆயிரத்து 796 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

118 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 71 பேரும், தனியார் மருத்துவமனையில் 47 பேரும் என 118 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 23 பேரும், கன்னியாகுமரியில் 13 பேரும், கோவை, திருவள்ளூர், நெல்லையில் தலா 8 பேரும், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் தலா 6 பேரும், திருச்சி, திருப்பூர், தென்காசி, ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டில் தலா 4 பேரும், திருவாரூரில் 3 பேரும், வேலூர், தேனி, சிவகங்கை, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினத்தில் தலா இருவரும், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 26 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 5,159 பேர் உயிரிழந்துள்ளனர்.

6 ஆயிரத்து 5 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,108 பேரும், நெல்லையில் 496 பேரும், விருதுநகரில் 374 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 810 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 863 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 709 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 800 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 61 அரசு நிறுவனங்கள், 70 தனியார் நிறுவனங்கள் என 131 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story