ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 393 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 393 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Aug 2020 1:01 AM GMT (Updated: 13 Aug 2020 1:01 AM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். புதிதாக 393 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

தென்காசி, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தினமும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

பாளையங்கோட்டை மகாராஜநகரை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், தாழையூத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 4 பேர், வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் கர்ப்பிணி பெண் போலீஸ், நெல்லை அரசு ஆஸ்பத்திரி ஊழியர், நெல்லை டவுனை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை உள்பட 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 938 ஆக அதிகரித்தது. இவர்களில் 5 ஆயிரத்து 226 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,577 பேர் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

8 பேர் பலி

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், ஏர்வாடி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர், அம்பை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 2 முதியவர்கள் என மொத்தம் 5 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானார்கள்.

தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் உள்பட 99 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. புளியங்குடி பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவர், தென்காசி பகுதியை சேர்ந்த 2 முதியவர்கள் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,055 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,369 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தது. கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. தொடர்ந்து காய்ச்சல் சிறப்பு முகாம்கள் மற்றும் சளி மாதிரிகள் சேகரிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று மாவட்டத்தில் மொத்தம் 157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. இதில் 7 ஆயிரத்து 925 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,619 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதுக்கோட்டை அருகே உள்ள மேல கூட்டுடன்காட்டை சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று முன்தினத்தை போன்று நேற்றும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story