சுரண்டை அருகே வீட்டில் புகுந்து பயங்கரம்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரமாரி வெட்டிக்கொலை


சுரண்டை அருகே வீட்டில் புகுந்து பயங்கரம்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2020 1:05 AM GMT (Updated: 13 Aug 2020 1:05 AM GMT)

சுரண்டை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சுரண்டை, 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 51). இவரது மனைவி உஷா (40). இவர்களுக்கு விஷ்வா (14), வினித் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சுரண்டை அருகே சாம்பவர் வடகரை அடுத்துள்ள ஊர்மேல்அழகியான் சங்குபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் முத்துப்பாண்டி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் சாம்பவர் வடகரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உஷா தனது மகன்களை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவிலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் முத்துப்பாண்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

வீட்டில் பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் நேற்று காலையில் முத்துப்பாண்டி வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு முத்துப்பாண்டி உடலில் பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக சாம்பவர் வடகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முத்துப்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடியது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

வெட்டிக்கொலை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.8 லட்சத்தை முத்துப்பாண்டி தனது வீட்டில் வைத்து உள்ளார். மேலும், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால், இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் முத்துப்பாண்டி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளனர். அங்கு பணத்தை கேட்டு தகராறு செய்தபோது ஏற்பட்ட பிரச்சினையில் மர்ம நபர்கள், முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த பணம் வீட்டில் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால் தப்பியது. மேலும், முன்விரோதம் காரணமாகவும் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் மர்ம நபர்கள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

சுரண்டை அருகே வீட்டில் புகுந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story