கர்நாடகத்தில் ஒரே நாளில் 6,706 பேருக்கு வைரஸ் தொற்று 2 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு


கர்நாடகத்தில் ஒரே நாளில் 6,706 பேருக்கு வைரஸ் தொற்று 2 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 9:37 PM GMT (Updated: 13 Aug 2020 9:37 PM GMT)

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 6,706 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 103 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனை தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,613 ஆக உயர்ந்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது.

தினமும்100 பேர் பலி

தினமும் சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் தினமும் சராசரியாக 100 பேர் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 96 ஆயிரத்து 494 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 3 ஆயிரத்து 510 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 103 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 6,706 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2 லட்சத்தைதாண்டியது

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 96 ஆயிரத்து 494 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 6,706 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 200 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 242 பேர் குணமடைந்து உள்ளனர். இதில், நேற்று மட்டும் 8 ஆயிரத்து 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 78 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பெங்களூரு நகரில் 1,893 பேருக்கும், மைசூருவில் 522 பேருக்கும், கலபுரகியில் 285 பேருக்கும், தார்வாரில் 257 பேருக்கும், பல்லாரியில் 445 பேருக்கும், கொப்பலில் 148 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 246 பேருக்கும், பாகல்கோட்டையில் 143 பேருக்கும், உடுப்பியில் 402 பேருக்கும், உத்தரகன்னடாவில் 64 பேருக்கும், பெலகாவியில் 288 பேருக்கும், விஜயாப்புராவில் 121 பேருக்கும், துமகூருவில் 85 பேருக்கும், மண்டியாவில் 130 பேருக்கும், ராய்ச்சூரில் 181 பேருக்கும், பீதரில் 143 பேருக்கும், தாவணகெரேயில் 328 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 70 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 25 பேருக் கும், கோலாரில் 77 பேருக்கும், குடகில் 55 பேருக்கும், சித்ரதுர்காவில் 67 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 56 பேருக்கும், ஹாசனில் 129 பேருக்கும், சிக்கமகளூருவில் 111 பேருக்கும், யாதகிரியில் 83 பேருக்கும், ராமநகரில் 53 பேருக்கும், ஹாவேரியில் 96 பேருக்கும், கதக்கில் 98 பேருக்கும், சிவமொக்காவில் 105 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

103 பேர் பலி

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 103 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் 22 பேரும், மைசூருவில் 12 பேரும், கலபுரகி மற்றும் பல்லாரியில் 9 பேரும், பெலகாவி, தார்வார், தட்சிண கன்னடாவில் தலா 6 பேரும், கொப்பலில் 5 பேரும், தாவணகெரே, ராய்ச்சூர், ஹாவேரி, துமகூருவில் தலா 3 பேரும், ராமநகர், உத்தரகன்னடா, சிக்கமகளூரு, விஜயாப்புரா, ஹாசன், மண்டியாவில் தலா 2 பேரும், உடுப்பி, பாகல்கோட்டை, சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 613 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மட்டும் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 1,338 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story