பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா


பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Aug 2020 11:49 PM GMT (Updated: 13 Aug 2020 11:49 PM GMT)

பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை, 

கொரோனா தொற்றில் பிரபல நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா உள்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் சென்னை எழும்பூரில் வசிக்கிறார். தமிழில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா,கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2, கீ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து டுவிட்டரில் நிக்கி கல்ராணி கூறியிருப்பதாவது:-

மீண்டு வருகிறேன்

“எனக்கு கடந்த வாரம் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. காய்ச்சல், சுவை இல்லாத தன்மை, நுகரும் திறன் குறைவு போன்ற பிரச்சினைகள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக லேசான பாதிப்பே இருந்தது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று இப்போது தேறி வருகிறேன். எனக்கு வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் இல்லை என்பதால் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன். இந்த காலகட்டம் அனைவரையும் பயமுறுத்தக்கூடியது.

எனவே நாம் பாதுகாப்பாக இருப்பதும், மற்றவர்கள் பாதுகாப்பை கவனிப்பதும் முக்கியம். எல்லோரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். அவசர தேவைக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story