திருச்செந்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2020 9:30 PM GMT (Updated: 18 Aug 2020 7:14 PM GMT)

திருச்செந்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 17-ந் தேதி முதல் ஒவ்வொரு தாலுகாவிலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்செந்தூர் பரமன்குறிச்சி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று காலை 9.30 மணி முதல் 9.55 மணி வரை டாஸ்மாக் பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் நெப்போலியன், தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் புங்கலிங்கம், மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக இறந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி வாரிசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கேரள அரசு மதுக்கடை நிர்வாக முறையை டாஸ்மாக்கில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணிநேரம் கடையடைப்பு செய்து அடையாள வேலைநிறுத்தம் செய்வது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட துனண தலைவர் ஆனந்த், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் ஆறுமுகமகேஷ், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாநில துணை பொதுச் செயலாளர் தேவ அருள்ராஜ், மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story