வேகம் எடுக்கும் கொரோனா: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 8 பேர் பலி - புதிதாக 554 பேருக்கு தொற்று பாதிப்பு


வேகம் எடுக்கும் கொரோனா: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 8 பேர் பலி - புதிதாக 554 பேருக்கு தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2020 1:10 AM GMT (Updated: 21 Aug 2020 1:10 AM GMT)

புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 554 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 8 பேர் பலியாகி உள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாநிலத்தில் சில இடங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,388 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்தன. அதில் 554 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதாவது வாழைக்குளத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும், தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த 54 வயது ஆண் ஜிப்மரிலும், பேட்டையன்சத்திரத்தை சேர்ந்த 55 வயது பெண், கடலூர் ரோட்டை சேர்ந்த 84 வயது மூதாட்டி, முத்தியால்பேட்டை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த 48 வயது ஆண், தர்மாபுரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை லட்சுமி நகரை சேர்ந்த 56 வயது ஆண் ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஏனாமில் 62 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

புதுவை பிராந்தியத்தில் 116 பேரும், காரைக்காலில் 7 பேரும், ஏனாமில் 14 பேரும் என ஒட்டுமொத்தமாக 137 பேர் உயிரிழந்துள்ளனர். மாகியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 59 ஆயிரத்து 757 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 48 ஆயிரத்து 902 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. 9 ஆயிரத்து 292 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 521 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிலும் 1,796 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,725 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 ஆயிரத்து 634 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவது 60.63 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.47 சதவீதமாகவும் உள்ளது.

இந்த மாதம் நாள்தோறும் சராசரியாக 250 பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பாதிப்பு 2 மடங்காக உள்ளது. எனவே பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

Next Story