47,600 பேருக்கு கொரோனா பரிசோதனை தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் 68 ஆக குறைப்பு


47,600 பேருக்கு கொரோனா பரிசோதனை தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் 68 ஆக குறைப்பு
x
தினத்தந்தி 21 Aug 2020 3:33 AM GMT (Updated: 21 Aug 2020 3:33 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் 47 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் 68 ஆக குறைக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் அங்கு நகர பகுதிகளை விட கிராமப் புறங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பணஹட்டி, அணிக்கொரை, தேனாடு உள்ளிட்ட கிராமங்களில் 30-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உறுதியானதால் நோய் தொற்று பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அப்பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அணிக்கொரை கிராமம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தடுப்புகள் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

68 பகுதிகள்

நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதுடன், கொரோனா உறுதியான நபர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதால் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 172 இடங்கள் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தது. கண்காணிப்பு காலம் முடிந்ததையடுத்து பல பகுதிகள் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டன. தற்போது 68 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

47,600 பேருக்கு பரிசோதனை

தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. நோய் தொற்று அதிகமாக பரவும் இடங்களாக 4 பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர் களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 47 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story