அரசுக்கு எதிராக தவறான தகவல்களை கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்


அரசுக்கு எதிராக தவறான தகவல்களை கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 22 Aug 2020 12:26 AM GMT (Updated: 22 Aug 2020 12:26 AM GMT)

அரசுக்கு எதிராக தவறான தகவல்களை கூறிய ஆசிரியரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் பாவனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக (ஆங்கிலம்) பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில், அரசு விதிகளுக்கு மாறாக அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து கோடிக்கணக்கான ரூபாய் அரசு இழப்பீடு செய்வதாகவும், அரசின் நடைமுறைகளை விமர்சித்தும் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேட்டி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

ஆசிரியர் சஸ்பெண்டு

இதையடுத்து அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் கலாவதி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story