பொது இடங்களில் சிலை வைக்க தடை: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


பொது இடங்களில் சிலை வைக்க தடை: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2020 12:52 AM GMT (Updated: 23 Aug 2020 12:52 AM GMT)

பொது இடங்களில் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாடினர்.

சேலம், 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக் கூடாது என்றும், அதற்கு மாறாக பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நேற்று பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில் நேற்று அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதன்பிறகு ராஜகணபதிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஆனால் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யூ-டியூப் மற்றும் பேஸ்புக் மூலமாக பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போலீசார் பாதுகாப்பு

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ராஜகணபதி கோவில் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் சேலம் மாநகரில் அரிசிபாளையம் தெப்பக்குளம் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில், சுகாதாரத்துறை அலுவலகம் அருகே உள்ள விநாயகர் கோவில், விஜயராகவன் நகரில் உள்ள வரப்பிரசாத விநாயகர் கோவில், மணக்காடு ராஜகணபதி நகரில் உள்ள விநாயகர் கோவில், மரவனேரி வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் சிறிய விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில், குறைவான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனிடையே, தமிழக அரசின் தடையை மீறி பொது இடங்களில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறதா? என்பது குறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம் மணக்காடு ராஜகணபதிநகரில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. சேலத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மிக எளிமையாக சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.

Next Story