அழகு நிலையத்தில் புகுந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


அழகு நிலையத்தில் புகுந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Aug 2020 12:57 AM GMT (Updated: 25 Aug 2020 12:57 AM GMT)

புதுவையில் அழகுநிலையத்தில் பெண்களிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

புதுச்சேரி, 

புதுவை அரியாங்குப்பம் கோட்டைமேடு ராகவா செட்டியார் வீதியை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவரது மனைவி கலா (வயது 30). இவர் புதுவை பாரதி வீதி- சவரிராயலு வீதியை சேர்ந்த அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மர்ம ஆசாமிகள் அழகுநிலையத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் முகப்பொலிவு செய்வது தொடர்பாக கலாவிடம் பேசியுள்ளனர். அதற்கு ரூ.1,500 ஆகும் என்று கலா கூறியுள்ளார்.

சங்கிலி பறிப்பு

அப்போது மேலும் 2 பேர் அழகுநிலையத்திற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் தாங்கள் இந்த ஏரியா ரவுடி என்று கலாவை மிரட்டி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் கலா மற்றும் அவருடன் பணிபுரிந்த தேவி என்பவரிடம் இருந்து சங்கிலி மற்றும் சுமார் 8½ பவுன் தங்க நகைகளையும் 4 செல்போன்களையும் பறித்துக்கொண்டனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய அவர்கள், கேமரா பதிவுகள் அடங்கிய கருவியையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து கலா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அழகு நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்டதால் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் குற்றவாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story