நெல்லை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு மானியம் - கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு மானியம் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2020 10:30 PM GMT (Updated: 25 Aug 2020 7:53 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.

நெல்லை,

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உணவு பதப்படுத்துதல் என்பது மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உண்ணும் வகையில் வேளாண் விளை பொருட்களான உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், கால்நடை இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் சார்ந்த மூலப்பொருட்கள் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான மாற்றம் ஆகும்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் இத்தகைய உணவு பொருட்கள் விரைவில் அழுகும் தன்மை கொண்டதால், அந்த பொருட்களை அறிவியல் ரீதியாக பதப்படுத்தாவிட்டால் வீணாகி விடும். நமது நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளது போலவே, தமிழ்நாட்டிலும் தற்போது 2 சதவீதத்துக்கும் குறைவாகவே வேளாண் பொருட்கள் பதப்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் உணவு பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் பதப்படுத்துதலை 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலை முன்னேற்றும் விதமாக 2018-19-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கையானது, முதல்-அமைச்சரால் கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. விவசாயிகள் வருமானத்தை அதிகரித்தல், உணவு பொருட்கள் வீணாவதை குறைத்தல், பண்ணை பொருட்களை மதிப்பு கூட்டுதல் போன்றவை குறிக்கோள் ஆகும். தமிழக அரசால் வெளியிடப்பட்ட இந்த கொள்கையால் வேளாண் தொழில் முனைவோர், அதிக எண்ணிக்கையிலான உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆர்வமுடன் உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது.

தமிழகத்தில் 24 ஆயிரம் சிறு மற்றும் மிகச்சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களும் 1,100 நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்தியாவின் உணவு பதப்படுத்துவதில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 7 சதவீதம் ஆகும்.

உணவு பதப்படுத்தும் கொள்கை 2018-ல் நிலம், நீர், மின்சாரம், முதலீட்டு மானியம் மற்றும் பணி ஊதிய விகித மானியம், வட்டி மானியம், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு அதிகரிக்கப்பட்ட வட்டி மானியம், நடுத்தர முதலீட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை, முத்திரை கட்டணத்தில் விலக்கு, சந்தை கட்டணத்தில் விலக்கு, சந்தைப்படுத்துதலில் உதவி, தரச்சான்று, போக்குவரத்து வசதி, ஏற்றுமதி தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைத்தல், ஒற்றை சாளர வசதி, தொழிலாளர்களுக்கான சலுகைகள் போன்ற சலுகைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த கொள்கை, தனியார் தொழில் முனைவோர், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்வதற்கும், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன் வளம் சார்ந்த உணவு பொருட்களின் தரத்தை உயர்த்தி, பதப்படுத்தும் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் விவசாய விளை பொருட்களுக்கு ஆதாய விலை கிடைக்கும் என்பதுடன், உணவு பதப்படுத்தும் தொழிலில் அதிக வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் கொள்கையை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வடிவமைக்கப்பட்டு, சமீபத்தில் அங்கீகரிகப்பட்டு உள்ளது.

எனவே ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர் இந்த கொள்கையின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், மானியங்களை பெற்று பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Next Story