தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் சாவு கார் மோதியது
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் கார் மோதி இறந்தார்.
கள்ளப்பெரம்பூர்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் தென்பாண்டிராஜன்(வயது34). இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள முத்துராமன்பட்டியில் வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஷெட் நடத்தி வந்தார். இவருடைய மனைவி திலகஜோதி மற்றும் மகள் ஆகியோர் தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள தென்னமநாட்டில் அவருடைய தாய் வீட்டில் இருந்தனர். நேற்று மாலை மனைவி- மகளையும் பார்க்க தென்பாண்டிராஜன் கந்தர்வக்கோட்டையில் இருந்து தென்னமநாட்டுக்கு தஞ்சை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அற்புதாபுரம் சோதனை சாவடி அருகே அவர் வந்த போது அந்த வழியாக தஞ்சையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற கார் திடீரென தென்பாண்டிராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட தென்பாண்டிராஜன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த காரைக்குடியை சேர்ந்த ஆறுமுகம்(வயது57) காயங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story