ஊத்தங்கரை அருகே, தனியார் பஸ்- மொபட் மோதல்; 2 வாலிபர்கள் பரிதாப சாவு
ஊத்தங்கரை அருகே தனியார் பஸ்சும், மொபட்டும் மோதி கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தார்கள். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சின்னகணக்கம்பட்டி சாலையில் உள்ள நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் நவீன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மகன் ருத்திக் (22).
இவர்கள் 2 பேரும் நேற்று மொபட்டில் நொச்சிப்பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சின்ன கணக்கம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ்சும், மொபட்டும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் மொபட்டில் சென்ற 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story