கொலையானவரின் உடலை ஏற்றி வந்தபோது விபத்து: செம்பூர் மேம்பாலத்தில் இருந்து கடையின் மேற்கூரையில் பாய்ந்த ஆம்புலன்ஸ் - 2 பேர் காயம்


கொலையானவரின் உடலை ஏற்றி வந்தபோது விபத்து: செம்பூர் மேம்பாலத்தில் இருந்து கடையின் மேற்கூரையில் பாய்ந்த ஆம்புலன்ஸ் - 2 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Aug 2020 12:05 AM GMT (Updated: 29 Aug 2020 12:05 AM GMT)

செம்பூர் மேம்பாலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று கீழே உள்ள கடையின் மேற்கூரையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

மும்பை,

தானே மாவட்டம் டோம்பிவிலியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஆம்புலன்ஸ் செம்பூர் அமர்மகால் மேம்பாலத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேம்பாலத்தில் இருந்து கீழே நோக்கி பாய்ந்தது.

அங்கு மேம்பாலத்தை யொட்டி கடைகள் இருந்ததால் கடையின் மேற்கூரையில் விழுந்த ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த ஆம்புலன்சில் சிக்கியிருந்த டிரைவர் மற்றும் உதவியாளரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விபத்தில் காயம் அடைந்திருந்த 2 பேரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற கடையின் மேற்கூரையில் கவிழ்ந்து கிடந்த ஆம்புலன்சை ராட்சத கிரேன் மூலம் தூக்கி பாலத்தில் நிறுத்தினர். இதன்பின் அதில் இருந்த உடலை மற்றொரு வாகனத்தில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story