கடையம் யூனியன் பகுதியில் கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் திட்டப்பணிகள்


கடையம் யூனியன் பகுதியில் கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 29 Aug 2020 10:30 PM GMT (Updated: 29 Aug 2020 8:16 PM GMT)

கடையம் யூனியன் பகுதியில் கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் திட்டப்பணிகள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பாவூர்சத்திரம்,

விவசாயிகளின் 48 ஆண்டுகால கனவு திட்டமான ராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிகளுக்கு தமிழக அரசு ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், ராமநதி அணைக்கட்டு பகுதியில் மேல்மட்ட கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையும் ஏற்கனவே நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜம்பு நதியில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாயில் ஆவுடையானூர் அருகே பத்மநாபபேரி குளத்தின் மறுகாலில் இருந்து கடையம் யூனியன் பகுதிகளான மைலப்பபுரம், வெங்கடாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு 2.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் மற்றும் அங்கிருந்து பல ஊர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பிரிவு கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

இந்த பணிகளை செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பத்மநாபபேரி குளத்தின் மறுகாலின் அருகில் இருந்து பாலம் ஒன்று அமைத்து அதில் இருந்து அமைக்கப்படும் பிரிவு கால்வாய் மூலம் மைலப்பபுரம், வெங்கடாம்பட்டி போன்ற பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், நகர செயலாளர் ஜெயராமன், முன்னாள் யூனியன் துணை தலைவர் உத்திரகுணபாண்டியன், ஆவுடையானூர் தர்மராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story