ஈரோட்டில் மறைந்த வசந்தகுமார் எம்.பி.க்கு அஞ்சலி


ஈரோட்டில் மறைந்த வசந்தகுமார் எம்.பி.க்கு அஞ்சலி
x
தினத்தந்தி 29 Aug 2020 11:00 PM GMT (Updated: 29 Aug 2020 9:15 PM GMT)

மறைந்த வசந்தகுமார் எம்.பி.க்கு ஈரோட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரோடு,

காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியில் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அவரது உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் எச்.வசந்தகுமார் எம்.பி. உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் சில வர்த்தக நிறுவனங்களிலும் வசந்தகுமாரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில், வசந்தகுமார் எம்.பி. உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, வசந்தகுமார் எம்.பி. உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் பிரபு என்கிற வெங்கடாச்சலம், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மண்டல தலைவர் திருச்செல்வம், சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர்கள் பாஷா, முகமது அர்சத் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ராஜன், மணல் மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், வசந்தகுமார் எம்.பி. உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், தளபதி ரமேஷ், சிவகுமார், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ஈரோடு பெருந்துறை ரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகை அருகில் உள்ள வசந்த் அன்-கோ ஷோரூம் முன்பு வசந்தகுமார் எம்.பி. உருவ படம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஷோரூம் மேலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, ஷோரூம் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story