அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு


அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 29 Aug 2020 10:50 PM GMT (Updated: 29 Aug 2020 10:50 PM GMT)

குன்னம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது 2 குழந்தைகள் அனாதையானார்கள்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 42). விவசாய கூலி. இவர் நேற்று வயலுக்கு உரம் போடுவதற்காக கூலி வேலைக்கு சென்றார். பின்னர் வயலில் உரம் தெளித்து விட்டு வரும் போது, பாதையில் ஒரு மின்கம்பி அறுந்து கிடந்தது. அந்த கம்பியில் மின்சாரம் வருவதை அறியாமல், பெரியசாமி அதனை கையால் எடுத்து அப்புறப்படுத்த முயற்சி செய்தார். அப்போது, பெரியசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்த குன்னம் போலீசார் விரைந்து சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்ஊழியர்களின் மெத்தனம்

மின் கம்பி அறுந்து விழுந்து 4 நாட்கள் ஆகிறது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் மின் ஊழியர்கள் வந்து சரி செய்யவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மின்வாரிய ஊழியர்களின் மெத்தனத்தால் தான், இந்த சம்பவம் நடந்து உள்ளது என்றும் தெரிவித்தனர். பெரியசாமியின் மனைவி முல்லைக்கொடி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பெரிசாமிக்கு அமர்நாத்(12) அபிஷேக்(9) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் முறையே 8-ம் வகுப்பும், 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தற்போது பெரியசாமியின் குழந்தைகள் அனாதையாகி பெற்றோர் ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர் என உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சுருக செய்தது.

Next Story