வருகிற 4-ந் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி


வருகிற 4-ந் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 29 Aug 2020 11:29 PM GMT (Updated: 29 Aug 2020 11:29 PM GMT)

வருகிற 4-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கர்ணாவூர் ஊராட்சி பாமணி கிராமத்தில் முதல்-அமைச்சரின் சூரியசக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடந்து வரும் வீடு கட்டும் பணிகளை அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். க்ஷ

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் பொன்.வாசுகிராமன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலராஜன், கார்த்திகேயன், கர்ணாவூர் ஊராட்சி மன்ற தலைவர் சாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த முதல்-அமைச்சர், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ஆவண செய்யப்படும் என அறிவித்ததற்கு டெல்டா பகுதி மக்களின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். மக்களுக்கு வழங்கும் திட்டங்களையும், நடைபெறும் பணிகளையும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நேற்று மன்னார்குடி அருகே கர்ணாவூர் ஊராட்சிக்குட்பட்ட பாமணி கிராமத்தில் நடைபெற்று வரும் அம்மா பசுமை வீடு கட்டும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

முற்றுப்புள்ளி

இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கான தொகையையும் உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருவாரூர், தஞ்சையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்-அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, முக கவசத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்ற நோக்கில் எந்த கருத்தையும் கூறவில்லை. அரசின் நடைமுறைகளை பின்பற்றி கொரோனா உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

டோக்கன்

அடுத்த மாதத்திற்கான(செப்டம்பர்) ரேஷன் பொருட்களை விலையில்லா அரிசியுடன் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு இன்று(சனிக்கிழமை) முதல் நான்கு நாட்களுக்கு வீடுகளுக்கே சென்று அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும். அதன் அடிப்படையில் வருகிற 3-ந் தேதி முதல் அனைத்து நியாயவிலை அங்காடிகளிலும் 200 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை பெற்று கொள்ளலாம்.

மேலும் 4-ந்தேதி(வெள்ளிக்கிழமை) விடுமுறை என்றாலும் அன்று விலையில்லா பொருட்கள் வழங்குவதற்காக ரேஷன் கடைகள் செயல்படும். இந்த விடுமுறை மற்றொரு நாளில் ஊழியர்களுக்கு சரி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story