நீலகிரி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிக்கு கொரோனா அலுவலகம் மூடப்பட்டது


நீலகிரி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிக்கு கொரோனா அலுவலகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 30 Aug 2020 1:02 AM GMT (Updated: 30 Aug 2020 1:02 AM GMT)

நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிக்கு கொரோனா உறுதியானது. இதனால் அவரது அலுவலகம் மூடப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டவரின் தொடர்பில் இருந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில் நீலகிரியில் கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்து உள்ளது. இந்த நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கிளினிக் நடத்தி வரும் பல் டாக்டர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக அதிகமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அவரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. கிளினிக்கில் சிகிச்சைக்காக வந்து சென்றவர்கள் மூலம் அவருக்கு தொற்று பரவி இருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து பல் டாக்டரின் மனைவியிடம் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த கிளினிக் மூடப்பட்டு உள்ளது.

மக்கள் தொடர்பு அலுவலகம் மூடல்

இந்த நிலையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம் சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதித்த அலுவலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றதுடன், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளார். இதனால் மேலும் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூடப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்தனர்.

சமீபத்தில் தான் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருப்பூரில் இருந்து ஊட்டிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story