திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது


திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2020 1:07 AM GMT (Updated: 30 Aug 2020 1:07 AM GMT)

திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலச்சந்தர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் திண்டிவனம் பகுதியில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, அவர்களை கண்காணித்து வந்தனர்.

இதில், கிடங்கல் பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், அருள்தாசன், தலைமை காவலர்கள் கணேசன், வெற்றிவேல், கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கிடங்கல் பிள்ளையார் கோவில் தெருவில் குமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

ரூ.1லட்சம்

அப்போது அங்கு குட்கா, பான்மசலா உள்ளிட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதை பல்வேறு பகுதியில் இருந்து கடத்தி வந்து, விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விற்பனையில் ஈடுபட்ட சண்முகம்(வயது 55), குமார் மகன் முகேஷ்(21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் குடோனில் இருந்த 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வலைவீச்சு

இதற்கிடையே போலீஸ் வருகை பற்றி அறிந்த, குடோன் உரிமையாளர் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story