கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டது: 5 மாதங்களுக்கு பின்னர் சோரியாங்குப்பம் பாலம் மீண்டும் திறப்பு விவசாயிகள், மதுபிரியர்கள் மகிழ்ச்சி


கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டது: 5 மாதங்களுக்கு பின்னர் சோரியாங்குப்பம் பாலம் மீண்டும் திறப்பு விவசாயிகள், மதுபிரியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 30 Aug 2020 1:58 AM GMT (Updated: 30 Aug 2020 1:58 AM GMT)

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சோரியாங்குப்பம் பாலம் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாகூர்,

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், புதுச்சேரி - கடலூர் எல்லை பகுதியில் உள்ள முள்ளோடை, சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய சாலைகள் தடுப்பு கட்டைகளால் மூடி சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் புதுச்சேரி - கடலூருக்கு இணைப்பாக விளங்கும் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலமும் மூடப்பட்டது. இதனால் பாகூர், கடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல், காய்கறி உள்ளிட்ட விளைபொருட்களை கடலூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பாலத்தை திறக்க பாகூர் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் புதுச்சேரி வருவாய்த்துறை உத்தரவின்பேரில் பாகூர் போலீசார் நேற்று காலை சோரியாங்குப்பம் பாலத்தில் இருந்த தடுப்புகளை அகற்றினர். இதையடுத்து போக்குவரத்துக்காக பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

இதன் வழியாக பாகூர், கடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பாலம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடைகளுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய வகையில் இந்த பாலம் இருப்பதால் மது பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story