ஆன்லைன் விற்பனையும் தீவிரமாக கண்காணிக்கப்படும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் எச்சரிக்கை


ஆன்லைன் விற்பனையும் தீவிரமாக கண்காணிக்கப்படும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Aug 2020 10:42 PM GMT (Updated: 30 Aug 2020 10:42 PM GMT)

ஆன்லைன் மூலமாக நடைபெறும் போதைப்பொருள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், போதைப்பொருள் பயன்படுத்துவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியை கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தொடங்கி வைத்தார்.

பின்னர் டி.ஜி.பி. பிரவீன் சூட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்பட 3 பேரை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், 3 பேரையும் கைது செய்திருந்தாலும், இந்த சம்பவத்தில் கன்னட திரையுலகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது பற்றி விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரையும், போதைப்பொருட்களை பயன்படுத்துவோரையும், இந்த போதைப்பொருள் விற்பனையில் இடைத்தரகர்களாக செயல்படுவோரையும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் போலீசார் கைது செய்து வருகிறார்கள். போதைப்பொருள் விற்பனையை அடியோடு ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கன்னட திரையுலககை சேர்ந்த நடிகர்-நடிகைகள், பிற கலைஞர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல்களுடன் தொடர்பில் இருப்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. கைதான 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போதும், அதுபற்றி தெரியவந்திருக்கிறது. நடிகர், நடிகைகளுடன், நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து சில நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. ஆன்லைன் மூலமாக போதைப்பொருள் விற்பனை செய்வது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பெங்களூரு போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு போதைப்பொருளை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story