தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: போதை மாத்திரைகள் விற்பனையில் திரைஉலகினர் தொடர்பு குறித்து விசாரணை - போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: போதை மாத்திரைகள் விற்பனையில் திரைஉலகினர் தொடர்பு குறித்து விசாரணை - போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2020 11:30 PM GMT (Updated: 30 Aug 2020 11:11 PM GMT)

போதை மாத்திரைகள் விற்பனை வழக்கில் கன்னட திரைஉலகினர் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் சமீபகாலமாக கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக, பெங்களூருவை சேர்ந்த ரவீந்திரன், சின்னத்திரை நடிகை அனிகா, அனூப் ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இதில் கைதான நடிகை அனிகாவுக்கு, கன்னட திரைஉலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உள்பட திரைப்படத் துறையினருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது, அனிகா கன்னட திரையுலகினருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

கன்னட திரைஉலகம் சார்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் நடிகர்-நடிகைகள் உள்பட திரைப்பட பிரபலங்கள் இந்த போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதைதொடர்ந்து கைதான அனிகாவிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கிய நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்களிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான இந்திரஜித் லங்கேஷ், கன்னட திரைஉலகில் நடிகர், நடிகைகள் உள்பட திரைஉலக பிரபலங்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி வருவதாகவும், அந்த நடிகர், நடிகைகள் யார்-யார் என்பது பற்றி தனக்கு தெரியும் என்றும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

அத்துடன் அவர், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராகி எனக்கு தெரிந்த தகவல்களையும் வழங்குவேன் என்று கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் போலீசாருக்கு தகவல் வழங்கவும், பெங்களூருவில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும் போதை பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து பணியாற்ற இந்திரஜித் லங்கேசுக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இதற்கிடையே கன்னட திரைஉலகினர் போதை பொருட்களை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும்படி, இந்திரஜித் லங்கேசுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர். அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணி அளவில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி தனக்கு தெரிந்த விவரங்களை அளிக்க உள்ளார். போதை மாத்திரை விற்பனை விவகாரத்தில் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் கூறிய கருத்துக்கு கன்னட திரைஉலகில் ஒரு தரப்பினர் எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் கர்நாடகத்தில் விசுவரூபம் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் போதைப்பொருள் விற்பனையில் கன்னட திரைஉலகினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கஞ்சா உள்ளிட்ட சில போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பலை மட்டும் போலீசார் தீவிரமாக கண்காணித்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது டார்க் நெட் என்ற இணையதளம் மூலமாக மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவது பகிரங்கமாக தெரியவந்துள்ளது. ஆன்லைன் மூலமாக போதைப்பொருட்களை ஆர்டர் செய்து, தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருட்கள் விற்பனையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பெரிய கும்பலே ஈடுபட்டுள்ளனர்.

ஆன்லைன் மூலமாக நடைபெறும் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க அரசும், போலீசாரும் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கர்நாடக திரைஉலகை சேர்ந்தவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான முறையில் விசாரணை நடத்தப்படும். கன்னட திரைப்படத் துறையில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள, அவருக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கூறும் தகவல்களின் பேரில் விசாரிக்கப்படும். இந்த போதைப்பொருள் விற்பனை சம்பவம் குறித்து தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமாத்துறை ஆகட்டும், வேறு எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பிரபலமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சினிமாத்துறையில் உள்ளவர்கள் யார், யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடந்துள்ள சம்பவம் மட்டுமின்றி, இதற்கு முன்பு யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பாகவும் ஆழமான விசாரணை நடத்தப்படும். மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story