மயிலாடுதுறை அருகே பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் கொலை தந்தை- மகன்கள் உள்பட 4 பேர் கைது


மயிலாடுதுறை அருகே பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் கொலை தந்தை- மகன்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2020 11:31 PM GMT (Updated: 30 Aug 2020 11:31 PM GMT)

மயிலாடுதுறை அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கன்னித்தோப்பு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் விஜய்(வயது24). பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் விஜய் தனது மோட்டார் சைக்கிளில் மாப்படுகை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த மாப்படுகை மெயின் ரோட்டை சேர்ந்த மனோகரின்(50) மீது விஜய் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் உரசியது. இதனால் விஜய்க்கும் மனோகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மனோகர் மற்றும் அவர் தரப்பினர் விஜய்யை தாக்கினர். இதைத்தொடர்ந்து விஜய் மற்றும் அவரது தரப்பினர் மனோகர் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டனர்.

அப்போது மனோகர் தரப்பினர் ஆயுதங்களால் விஜய் மற்றும் அவரது அண்ணன் விக்னேசை தாக்கினர். இதில் விஜய்க்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக இறந்தார்.

4 பேர் கைது

தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து

மனோகர், அவரது மகன்கள் செல்வமணி(24), அன்புச்செல்வன் (22), அதே பகுதியை சேர்ந்த சுந்தரராஜ்(44) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை அவயம்பாள்புரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட விஜய்யும், கைது செய்யப்பட்டவர்களும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கத்தியால் குத்தி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாப்படுகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story