நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை


நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
x
தினத்தந்தி 31 Aug 2020 12:15 AM GMT (Updated: 31 Aug 2020 12:15 AM GMT)

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக நடிகை ரியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 3-வது நாளாக தீவிர விசாரணை நடத்தினர்.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். 34 வயது நடிகரான அவரது மரணம் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில் திடீர் திருப்பமாக பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (வயது 28) மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மும்பை சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானி, கணக்காளர் ராஜத் மேவதி, மேலாளர் சாமுவேல் மிரந்தா, சமையல்காரர் நீரஜ் சிங், வீட்டு வேலைக்காரர் கேசவ் ஆகியோரிடம் அவர்கள் பலகட்ட விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நடிகை ரியாவிடம் கடந்த வெள்ளிக்கிழமை 10½ மணி நேரமும், நேற்று முன்தினம் 7 மணி நேரமும் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஆனாலும் அவரிடம் இருந்து உண்மையை கறக்க முடியாமல் அதிகாரிகள் திணறியதாக கூறப்படுகிறது.

எனவே மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டதால், நேற்று 3-வது நாளாக நடிகை ரியா டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அவரது சகோதரர் சோவிக் 4-வது நாளாக வந்து ஆஜரானார். அவர்கள் இருவரும் வந்த காருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

காலை 10.30 மணி முதல் இரவு வரை நடிகை ரியா, அவரது சகோதரர்களிடம் தொடர் விசாரணை நடந்தது. அவர்களிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று நடந்த விசாரணை முடிவில், நடிகை ரியா கைது ஆகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டதால், தனது சகோதரருடன் அவர் வீடு திரும்பினார்.

நேற்றைய விசாரணையின் போது சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரந்தா மற்றும் வீட்டு வேலைக்காரர் கேசவ் ஆகியோரும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி இருந்தனர்.

Next Story