பீர் பாட்டிலால் நண்பனை குத்திக்கொன்ற வாலிபர் கைது 2 மாதங்களுக்கு பிறகு பிணம் தோண்டி எடுப்பு


பீர் பாட்டிலால் நண்பனை குத்திக்கொன்ற வாலிபர் கைது 2 மாதங்களுக்கு பிறகு பிணம் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 6:10 AM GMT (Updated: 31 Aug 2020 6:10 AM GMT)

வானாடிபாடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் நண்பனை பீர் பாட்டிலால் குத்திக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 2 மாதங்களுக்கு பிறகு அதிகாரிகள் முன்னிலையில் பிணத்தைத் தோண்டி எடுத்து, சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

சிப்காட்(ராணிப்பேட்டை),

வானாபாடியை அடுத்த அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசி என்கிற சசிக்குமார் (வயது 28). இவர் வழிப்பறி, கொள்ளை, சங்கிலி பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அவரை, போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அவர், கடந்தசில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

கடந்த வாரம் வாலாஜாபேட்டை பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கண்காணிப்புக் கேமராவின் உதவியோடு கைது செய்தனர். சிப்காட் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வழிப்பறி கொள்ளையன் சசிக்குமார் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு

காட்பாடி தாலுகா கொடுக்கந்தாங்கல் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த பிரபு லாரன்ஸ் (36) என்பவருடன் சசிக்குமாருக்கு அறிமுகம் ஏற்பட்டது. நண்பர்களான இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளனர். வழிப்பறி கொள்ளை சம்பந்தமாக பிரபு லாரன்சுக்கும், சசிக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் சசிக்குமாரின் மனைவிக்கும், பிரபு லாரன்சுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் வெளியில் தெரிய வரவே பிரபு லாரன்ஸ் மீது சசிக்குமார் கடும் கோபத்தில் இருந்து வந்தார். அவர், நண்பனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி சசிக்குமார், பிரபு லாரன்சை மது குடிக்க அழைத்துள்ளார்.

பீர் பாட்டிலால் அடித்துக்கொலை

அவரின் அழைப்பை ஏற்ற பிரபு லாரன்ஸ் அவருடன் மது குடிக்க வந்துள்ளார். வானாபாடி அருகே உள்ள எடப்பாளையத்தில் இருந்து அம்மூர் செல்லும் சாலையில் உள்ள ஆற்றுக்கால்வாயில் அமர்ந்து இருவரும் மது குடித்துள்ளனர். சசிக்குமாருக்கு துணையாக வந்த சென்னையைச் சேர்ந்த எலி என்கிற விஜய் என்பவரும் அவர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.

போதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சசிக்குமாரும், நண்பர் விஜய்யும் சேர்ந்து பீர் பாட்டிலால் பிரபு லாரன்சின் தலையில் அடித்துள்ளனர். உடைந்த பீர் பாட்டிலால் பிரபு லாரன்ஸ் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். பின்னர் அவரின் உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டதாக, சசிக்குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதிகாரிகள் முன்னிலையில் பிணம் தோண்டி எடுப்பு

நேற்று மாலை வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, தடயவியல் துறை இணை இயக்குனர் ஜேம்ஸ் அந்தோணிராஜ், தடயவியல் துறை முன்னாள் இணை இயக்குனர் பாரி, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த், வானாபாடி கிராம நிர்வாக அலுவலர் கதிரேசன் மற்றும் போலீசார் முன்னிலையில் சசிக்குமார் அடையாளம் காட்டிய ஆற்றுக்கால்வாய் கரை அருகில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

கொலை செய்து 2 மாதங்களுக்குமேல் ஆகி விட்டதால் பிணம் சிதிலமடைந்து மண்டை ஓடு, எலும்புகள் என தனித்தனியாக தோண்டி எடுக்கப்பட்டது. இதை, வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்திருந்த டாக்டர் நாகேந்திரகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் மீண்டும் பிணம் அங்கேயே புதைக்கப்பட்டது.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்

சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து சசிக்குமாரை கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த சென்னையைச் சேர்ந்த எலி என்கிற விஜய் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட பிரபு லாரன்சின் மனைவி 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பிரபு லாரன்ஸ் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story