ஊரடங்கு தளர்வால் வெளியூர்களுக்கு மக்கள் படையெடுப்பு வடமாநில தொழிலாளர்கள் நெல்லை திரும்பினர்


ஊரடங்கு தளர்வால் வெளியூர்களுக்கு மக்கள் படையெடுப்பு வடமாநில தொழிலாளர்கள் நெல்லை திரும்பினர்
x
தினத்தந்தி 31 Aug 2020 10:30 PM GMT (Updated: 31 Aug 2020 8:29 PM GMT)

ஊரடங்கு தளர்வால், நெல்லையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மீண்டும் வெளியூர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். அதேபோல் வடமாநில தொழிலாளர்களும் மீண்டும் நெல்லைக்கு திரும்பினர்.

நெல்லை,

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொடிய கொரோனா வைரஸ் தமிழகம் வரை வந்து ஆட்டிப் படைத்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கிறது.

இந்த நிலையில் ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருக்கிறது. அந்த தளர்வும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. ஊரடங்கால் வெளியூர்களில் வசித்து வந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு இன்றியும், தொழில் பாதிப்பு ஏற்பட்டும் தவித்தார்கள். இதையடுத்து பெரும்பாலானோர் நெல்லைக்கும், அவரவர் சொந்த ஊர்களுக்கும் திரும்பி வந்தனர். சில மாதங்களாக அவர்கள் சொந்த ஊர்களில் வசித்து, கிடைத்த வேலைக்கு சென்று வந்தனர்.

தற்போது ஊரடங்கு தளர்வில் இ-பாஸ் இன்றி, தமிழகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தொழில்கள் மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு வந்திருந்தவர்கள் மீண்டும் தாங்கள் ஏற்கனவே வேலை செய்த வெளியூர்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

அதன்படி நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள், நெல்லை வழியாக கார், ஆட்டோ, மினி வேன்களில் வேலைக்கு புறப்பட்டு செல்கிறார்கள். ஏற்கனவே சொந்த ஊருக்கு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மொபட்டுகளிலும் லக்கேஜ்களை ஏற்றிக்கொண்டு பலர் பயணம் செய்வதை காண முடிந்தது. இவர்கள் கங்கைகொண்டான் சோதனைச்சாவடியை கடந்து சாரை, சாரையாக பயணம் செய்கிறார்கள். ஆனால், போலீசார் அவர்கள் யாரையும் கட்டுப்படுத்தாமல், பயணம் செய்ய அனுமதி அளித்தனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான பணியிலும், தனியார் கட்டுமான பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வந்தனர். கொரோனா ஊரடங்கால் வேலை முடங்கியதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களை தமிழகத்துக்கு மீண்டும் வேலைக்கு அழைத்து வரலாம் என்று அரசு அனுமதி அளித்தது. இதையொட்டி வடமாநில தொழிலாளர்கள் நெல்லை மாவட்டத்துக்கு திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். ஏற்கனவே 400 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மேலும் 60 பேர் 2 பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் மையத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். பின்னர் கொரோனா பரிசோதனைக் காக மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் கொரோனா பரிசோதனைக்காக, கங்கைகொண்டான் தனிமைப்படுத்துதல் மையத்துக்கு அரசு பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர். ஊரடங்கு தளர்வால் தென் மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் புறப்பட்டு செல்கின்றனர். வெளிமாநில தொழிலாளர்களும் நெல்லைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Next Story