பெரம்பலூர், அரியலூரில் இன்று முதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு


பெரம்பலூர், அரியலூரில் இன்று முதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 31 Aug 2020 10:15 PM GMT (Updated: 1 Sep 2020 1:42 AM GMT)

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று முதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாவட்டத்திற்குள் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இயக்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூரில் இருந்து அல்லிநகரம் வரையிலும், பெரம்பலூரில் இருந்து பாடாலூர், பூலாம்பாடி, திருமாந்துறை, லெப்பைக்குடிகாடு, மலையாளப்பட்டி, கிருஷ்ணாபுரம், வி.களத்தூர் போன்ற கிராமப்புற பகுதிகளுக்கு இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்பட உள்ளன.

இரவு 7மணிக்கு சிங்கிள் நடை இயக்கப்படும் பஸ்கள் 9 மணிக்குள்ளாக நடைநிறைவு செய்யப்பட்டு, பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமணைக்கு பஸ்கள் கொண்டுசெல்லப்படும். கடந்த முறை ஊரடங்கு தளர்வின்போது 24 பஸ்கள் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இயக்கப்பட்டன. தற்போது 3 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன என்று அரசு போக்குவரத்துக்கழக பெரம்பலூர் கிளை மேலாளர் ஞானமூர்த்தி தெரிவித்தார்.

இதற்காக துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் இன்று முதல் இயக்கப்பட உள்ள பஸ்கள் கிருமிநாசினிகள் கொண்டு தூய்மை செய்யப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயக்குவது தற்போது சாத்தியமில்லை என்றும், மண்டலங்களுக்குள் பஸ்களை இயக்க தமிழக அரசுஅறிவிக்கும்போது தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று தனியார் பஸ் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் 23 டவுன் பஸ்களும், 63 வெளியூர் பஸ்களும் உள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரியலூரில் எத்தனை பஸ்கள் எந்த வழி தடத்தில் ஓட்டுவது என்று தலைமை அலுவலகத்தில் இருந்த தகவல் வராததால் ஊழியர்கள் குழப்பம் அடைந்துள்னர். மாவட்டத்தில் தனியார் பஸ்கள் எதுவும் ஓட்டுவது இல்லை என்று உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 40 தனியார் மினி பஸ்கள் ஓடுகின்றன. இன்று காலை முதல் 20 வழித்தடங்களில் பஸ்களை ஓட்ட முடிவு செய்துள்ளதாக மாவட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் பஸ்கள் ஓட உள்ளதால், அரியலூர் பஸ்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பஸ்நிலையத்தின் ஒரு பகுதியில் சேதம் அடைந்துள்ளதால் அங்கு பயணிகள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அமருவதற்காக நகராட்சி ஆணையர் குமரன் உத்தரவின் பேரில் தற்காலிக பந்தல் அமைக்கபட்டுள்ளது.

இதேபோல் ஜெயங்கொண்டம் பணிமனையில் உள்ள 65 விரைவு பஸ்கள், 25 டவுன் பஸ்கள் உள்பட 88 அரசு பஸ்கள் பழுதுபார்ப்பு செய்து தூய்மைப்படுத்தப்பட்டது. பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளும் தயார்படுத்தப்பட்டது. இதுபோல் நகராட்சி நிர்வாகமும் பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து மக்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story