ஈரோட்டில் 5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி


ஈரோட்டில் 5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி
x

ஈரோட்டில் 5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபடாமல் இருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1,400 பெரிய மற்றும் சிறிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பூசாரிகள் மூலம் கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தது.

சுத்தம் செய்யும் பணி

வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகரில் உள்ள பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், திண்டல் முருகன் கோவில் என அனைத்து கோவில்களிலும் நேற்று முன்தினம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு கோவிலை சுத்தப்படுத்தினர். மேலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோவில் நடை திறப்பு

இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. 5 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு வந்தனர். அனைத்து பக்தர்களும் முக கவசம் அணிந்திருந்தனர். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில்களில் கோவிலுக்கு வந்த பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. சமூக இடைவெளியை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மகிழ்ச்சி

இதேபோல் ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் நினைவாலயம், புனித அமல அன்னை ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களும் நேற்று திறக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களும் நேற்று அதிகாலை திறக்கப்பட்டன. இதில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஈரோட்டில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story