ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின


ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின
x
தினத்தந்தி 2 Sep 2020 10:30 PM GMT (Updated: 2 Sep 2020 10:30 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின.

ஈரோடு,

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி நள்ளிரவில் ஈரோடு மாநகர் உள்பட மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வெயில் அடித்தது. அதைத்தொடர்ந்து இரவு 11 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று பலத்த மழையாக கொட்டியது. சுமார் ½ மணி நேரம் பெய்த மழையால் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து ஓடியது. ஈரோடு பிரப்ரோடு, மாணிக்கம்பாளையம் ரோடு, சென்னிமலை ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் குட்டைபோல் தேங்கி நின்றது.

தாளவாடி

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தாளவாடியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

இதேபோல் தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், ஒசூர், சிக்கள்ளி, பனக்கள்ளி, ஆசனூர், குளியாடா, திகனாரை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. வனப்பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பியது. விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் தாளவாடி மற்றும் சூசைபுரம் அருகே உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் தாளவாடி பகுதியில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 5 மணி முதல் மழை விட்டு, விட்டு பெய்தது.

கொடுமுடி

இதேபோல் கொடுமுடியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. நேற்று காலை முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் மதியம் 2.20 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மாலை 4.40 மணி வரை சுமார் 2½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது. மேலும் ஆவுடையார்பாறை, தாமரைப்பாளையம், சாலைப்புதூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

கடம்பூர்

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் வனப்பகுதியில் நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் மல்லியம்மன் கோவில், இரட்டை பாலம், இடுக்குபாறை தன்னாசியப்பன் கோவில் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் அருவிபோல் கொட்டியது.

மழை அளவு

இதேபோல் குண்டேரிபள்ளம், தாளவாடி, நம்பியூர், சென்னிமலை உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குண்டேரிபள்ளம் -85.5, தாளவாடி -69, நம்பியூர் -39, சென்னிமலை -36, பவானிசாகர் -32.8, கோபி -28, எலந்தகுட்டை மேடு -22.4, கொடிவேரி -22, சத்தியமங்கலம் -20, வரட்டுப்பள்ளம் -11.4, ஈரோடு -11, மொடக்குறிச்சி -10, கொடுமுடி -9.8, பெருந்துறை -7, பவானி -5, கவுந்தப்பாடி -4, அம்மாபேட்டை -2.8. மாவட்டம் முழுவதும் 415.7 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 24.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Next Story