நாலச்சோப்ராவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 22 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


நாலச்சோப்ராவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 22 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 2 Sep 2020 11:04 PM GMT (Updated: 2 Sep 2020 11:04 PM GMT)

நாலாச்சோப்ராவில் 4 மாடி கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அதில் வசித்து வந்த 22 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வசாய்,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு அச்சோலே ரோட்டில் சாபல்யா என்ற 4 மாடி கட்டிடம் இருந்தது. 25 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 2009-ம் ஆண்டு மாநகராட்சியினர் நடத்திய ஆய்வில் இந்த கட்டிடம் சேதம் அடைந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்களை காலி செய்யுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து அங்கு வசித்து வந்த 15 குடும்பத்தினர் தங்கள் வீட்டை காலி செய்து விட்டனர். மற்ற 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் மட்டும் மாநகராட்சியின் எச்சரிக்கையையும் மீறி அந்த கட்டிடத்திலேயே வசித்து வந்தனர்.

இடிந்து விழுந்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் சாபல்யா கட்டிடத்தில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் தூக்கத்தில் இருந்து எழுந்து அலறி அடித்தபடி கட்டிடத்தை விட்டு வெளியே ஓடிவந்தனர். அந்த கட்டிடத்தில் 4-வது மாடியில் வசித்து வந்த தயானந்த், அவரது மனைவி சீமா ஆகியோர் தங்களது உடைமைகளை எடுத்து கொண்டு கட்டிடத்தின் வாசற்படி அருகே வந்தபோது, கட்டிடத்தின் தூண்களில் பிளவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 1 மணி அளவில் கட்டிடம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

22 பேர் உயிர் தப்பினர்

முன்னதாக கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததால் அங்கு வசித்து வந்த 22 பேரும் அதிர்ஷ்டவசமாக கட்டிட இடிபாடுகளில் சிக்காமல் உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த வசாய் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா? என ஆய்வு செய்தனர். இதில், கட்டிடத்தில் வசித்த அனைவரும் உயிர் தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். மேலும் வீடு இழந்து தவித்த 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேரும் தற்காலிகமாக அங்குள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடுபாடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சியினர் மற்றும் தீயணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.

தரமற்ற கட்டுமானம்

கட்டிட விபத்து பற்றி அந்த கட்டிடத்தில் வசித்து வந்த அபய் நாயக் என்பவர் கூறுகையில், “ஊரடங்கு காரணமாக இங்கு வசித்து வந்தவர்கள் வேறு கட்டிடங்களில் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அங்கேயே வசிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு வசாய்-விரார் மாநகராட்சியின் ஒப்புதல் இல்லாமல் கட்டி உள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த கட்டிட விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story