நாகர்கோவிலில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை - சுவரில் உருக்கமாக எழுதி விட்டு தூக்கில் தொங்கிய பரிதாபம்


நாகர்கோவிலில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை - சுவரில் உருக்கமாக எழுதி விட்டு தூக்கில் தொங்கிய பரிதாபம்
x
தினத்தந்தி 4 Sep 2020 10:14 AM GMT (Updated: 4 Sep 2020 10:14 AM GMT)

நாகர்கோவிலில் குழந்தையில்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டு சுவரில் உருக்கமான பதிவை எழுதி விட்டு தூக்கில் தொங்கியுள்ளார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் தைக்காபள்ளி லாலாமுருக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). தொழிலாளி. இவருடைய மனைவி சுதா (24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆண்டுகள் சில கடந்தும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் சதீஷ் விரக்தியில் இருந்தார்.

மேலும், குழந்தை இல்லாத ஆதங்கத்தை தனது மனைவி, உறவினர்கள், நண்பர்களிடம் கூறி அவ்வப்போது அவர் கதறி அழுததாகவும் தெரிகிறது. அந்த சமயத்தில் சதீசுக்கு அவர்கள் ஆறுதல் கூறி மனதை தேற்றியுள்ளனர். எனினும் சதீஷால் இயல்பான நிலைக்கு வர முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவருக்கு குழந்தை இல்லாத ஏக்கம் வெளிப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வழக்கத்தை விட மிகவும் விரக்தி அடைந்த நிலையில் உறவினர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சதீஷ் தூங்கச் செல்வதாக கூறி விட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார். சதீஷின் செயலில் சந்தேகமடைந்த உறவினர்கள், சிறிது நேரம் கழித்து அவருடைய அறையின் கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது, அங்கு சதீஷ் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது வீட்டு சுவரில் தற்கொலைக்கான காரணம் குறித்து சில உருக்கமான தகவலை எழுதி விட்டு முடிவை தேடியுள்ளார்.

அதில், என் அன்புள்ள அப்பா, நீ எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை, அதன் காரணமாக உன்னிடமே நான் வருகிறேன். மேலும், எனது மனைவியை ஒன்றும் சொல்லாதீர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதே சமயத்தில் உறவினர்கள், நண்பர்கள் குறித்தும் உருக்கமான சில பதிவுகளை சுவரில் எழுதியிருந்தார்.

குழந்தை இல்லா ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story