கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே தொழிற்சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.9 லட்சம் பறித்த வழக்கில் 4 பேர் கைது


கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே தொழிற்சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.9 லட்சம் பறித்த வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sep 2020 11:21 PM GMT (Updated: 5 Sep 2020 11:21 PM GMT)

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே தொழிற்சாலை ஒப்பந்ததாரரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.9 லட்சம் பறித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி பிஸ்வால் (வயது 49) ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பாப்பான்குப்பம் கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், கடந்த மாதம் 10-ந் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.9 லட்சத்தை எடுத்து பையில் போட்டு மொபட்டின் முன்புறம் வைத்து வீட்டுக்கு புறப்பட்டார். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே பாப்பன்குப்பம் நோக்கி செல்லும்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மேட் அணிந்து வந்த 2 பேர், அவரை வழிமறித்து கத்திமுனையில் பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த துணிகர வழிப்பறி கொள்ளை தொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஜெகன் (28), மணிகண்டன் (32), ஆந்திர மாநிலம் நாகலாபுரத்தை சேர்ந்த சலீம் (23) மற்றும் ஓடிசாவை சேர்ந்த காய்தர் மாலிக் (30) ஆகிய 4 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். காய்தர் மாலிக் தவிர மற்ற 3 பேரும் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story