திருப்பூர் தெற்கு தொகுதியில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டரிடம் குணசேகரன் எம்.எல்.ஏ. மனு


திருப்பூர் தெற்கு தொகுதியில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டரிடம் குணசேகரன் எம்.எல்.ஏ. மனு
x
தினத்தந்தி 6 Sep 2020 8:53 AM GMT (Updated: 6 Sep 2020 8:53 AM GMT)

திருப்பூர் தெற்கு தொகுதியில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குணசேகரன் எம்.எல்.ஏ.,கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்தார்.

திருப்பூர்,

திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ. தனது தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது-

திருப்பூர் பூலவாரி சுகுமாறன் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் குடிசை மாற்று வாரியத்துக்கு செலுத்த வேண்டிய முழுத்தொகையை செலுத்தி பல வருடங்கள் ஆகிறது. இதுவரை அவர்களுக்கு வீட்டு மனைப்பத்திரம் மற்றும் பட்டா ஆகியவை வழங்கப்படவில்லை. மேலும் பட்டுக்கோட்டையார் நகர், அண்ணமார் காலனி, பெரிச்சிப்பாளையம் காலனி, காட்டுவளவு, எம்.ஜி.ஆர்.காலனி, காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. ஒருங்கிணைந்த மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் தற்போது இயங்கி வரும் சார்பதிவாளர்-2 மற்றும் தொட்டிப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை திருப்பூர் தெற்கு பகுதி பொதுமக்களின் வசதிக்காக இடமாற்றம் செய்ய வேண்டும். திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிட பணிகளுக்கு நடுவில் இடையூறாக உள்ள நூலக கட்டிடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது கட்டுமான பணிகள் முடியும் வரை நுலக கட்டிடத்தை வேறு இடத்துக்கு மாற்றி பின்னர் புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வஞ்சிப்பாளையம் ரோடு சிறுபூலுவப்பட்டி ரிங்ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலம், திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள சுரங்கப்பாலம், கொங்குமெயின் ரோட்டில் 2-வது ரெயில்வேகேட் பகுதியில் அமைக்கப்படும் ரெயில்வே மேம்பாலம், மணியகாரம்பாளையம்-மண்ணரை இணைப்பு நொய்யல் பாலத்தின் இருபுறமும் அணுகுசாலை பணிகள் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

ஜீவாநகர் குடியிருப்பு பகுதியை நீர்வழி புறம்போக்கு என்பதை வகைமாற்றம்செய்து அங்கு குடியிருக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பத்திர பதிவின் மூலம் காலியிட மனை பெற்று அங்கு குடியிருப்புகளை கட்டி பல வருடங்களாக வசிப்பவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அதன்படி கே.வி.ஆர்.நகர், அய்யன்நகர், செங்குந்தபுரம், செல்லம்நகர், காஞ்சிநகர், பச்சையப்பா நகர், போயர் காலனி, திருவேங்கடம்நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கொங்கணகிரி பகுதியில் பொதுமக்கள், பள்ளி,கல்லுரி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். கல்லம்பாளையம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். நொய்யல் ஆற்றின் குறுக்கே ஸ்ரீசக்தி தியேட்டர் ரோடு, ஈஸ்வரன் கோவில்வீதியை இணைக்கும் வகையில் பாலம்அமைக்கவேண்டும். ஏ.ஐ.டி.யு.சி.காலனி முதல் மணியக்காரம்பாளையம் பகுதியை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து தொழிலாளர்களை உறுப்பினர்களாக்க வேண்டும். இவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Next Story