தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி நெல்லையில் புதிதாக 81 பேருக்கு தொற்று


தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி நெல்லையில் புதிதாக 81 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 7 Sep 2020 10:56 PM GMT (Updated: 7 Sep 2020 10:56 PM GMT)

தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானார்கள். நெல்லையில் புதிதாக 81 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 3 பேர் உள்பட 81 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் பணியாற்றிய பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 27 பேர், நாங்குநேரி பகுதியில் 8 பேர், சேரன்மாதேவி பகுதியில் 2 பேர், களக்காடு பகுதியில் 6 பேர், மானூர் பகுதியில் 5 பேர், ராதாபுரம் பகுதியில் 4 பேர், வள்ளியூர் பகுதியில் 12 பேர், அம்பை பகுதியில் 13 பேர் உள்பட மொத்தம் 81 பேர் அடங்குவர்.

இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 396-ஆக அதிகரித்து உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 65 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஆலங்குளம் யூனியன் பகுதியில் 11 பேர், கடையம் யூனியன் பகுதியில் 2 பேர், கடையநல்லூர் யூனியன் பகுதியில் 4 பேர், கீழப்பாவூர் யூனியன் பகுதியில் 6 பேர், குருவிகுளம் யூனியன் பகுதியில் 9 பேர், சங்கரன்கோவில் யூனியன் பகுதியில் 4 பேர், செங்கோட்டை யூனியன் பகுதியில் 11 பேர், தென்காசி யூனியன் பகுதியில் 13 பேர், வாசுதேவநல்லூர் யூனியன் பகுதியில் 5 பேர் ஆவர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்து உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 877 ஆகும்.

ஒருவர் பலி

நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 829-ஆக உள்ளது. இதுவரை 11 ஆயிரம் பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 714 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 117-ஆக அதிகரித்து உள்ளது.

Next Story