போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்: நடிகை சஞ்சனா கல்ராணி அதிரடி கைது


போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்: நடிகை சஞ்சனா கல்ராணி அதிரடி கைது
x
தினத்தந்தி 8 Sep 2020 8:26 PM GMT (Updated: 8 Sep 2020 8:26 PM GMT)

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராகிணி திவேதியிடம் விசாரணை

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகினர் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும்போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு அதிகாரியுமான ரவிசங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பரும், ரியல்எஸ்டேட் அதிபருமான ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரசாந்த் ரங்கா, தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா, வீரேன் கண்ணா, நியாஷ், ப்ரீத்வி ஷெட்டி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ரவிசங்கர் தவிர நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடிகை சஞ்சனாவுக்கு தொடர்பு

நடிகை ராகிணி திவேதி உள்பட கைதான 8 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பரான ராகுலிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைப்பொருள் விவகாரத்தில் ராகுல் கைதாகி இருப்பதால், இந்த விவகாரத்தில் சஞ்சனா கல்ராணிக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் தனக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று நடிகை சஞ்சனா கல்ராணி கூறி வந்தார்.

இந்த நிலையில், கைதான ராகுலிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது நடிகை சஞ்சனா கல்ராணிக்கு போதைப்பொருள் பயன்படுத்துவது, போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தொடர்பான தகவல்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணியிடம் விசாரணை நடத்தவும், அவரது வீட்டில் சோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்தார்கள். இதற்காக சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை நடத்துவதற்கு கோர்ட்டில் முறையான அனுமதி பெற்றனர்.

வீட்டில் அதிரடி சோதனை

இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சஞ்சனா கல்ராணி வீட்டில் தான் இருந்தார். போலீசார் வருவதை சற்றும் எதிர்பாராத அவர் தனது வீட்டில் சோதனை நடந்ததால், அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சஞ்சனா கல்ராணியின் வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அவரிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் மடிக்கணினியை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தார்கள்.

நடிகை சஞ்சனா கல்ராணியின் வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை மேற்கொண்டனர். 3 மணிநேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிந்ததும், இந்திராநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு சஞ்சனா கல்ராணியை போலீசார் அழைத்து வந்தனர். காலை 11.30 மணியில் இருந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டா அஞ்சுமாலா, உதவி போலீஸ் கமிஷனர் கவுதம் ஆகியோர் நடிகை சஞ்சனா கல்ராணியிடம் விசாரணை நடத்தினார்கள்.

சஞ்சனா கைது

குறிப்பாக ராகுலுடன் உள்ள தொடர்பு, விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினாரா? என்பது குறித்து முதலில் விசாரணை நடத்தி சஞ்சனா கல்ராணியிடம் இருந்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ப்ரீத்வி ஷெட்டியுடன் உள்ள தொடர்பு, அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது ஏன்? உள்ளிட்டவை குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணைக்கு சஞ்சனா கல்ராணி ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் போதைப்பொருள் விவகாரத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியதாக தெரிகிறது.

ஆனால் ராகுல் மற்றும் ப்ரீத்வி ஷெட்டியிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது போதைப்பொருள் விற்பனை மற்றும் அதை பயன்படுத்தியதில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலையில் நடிகை சஞ்சனா கல்ராணியை போலீசார் கைது செய்தார்கள். முன்னதாக மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு மருத்துவ பரிசோதனையும், கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதன்பிறகு, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிக்கி கல்ராணியின் சகோதரி

கன்னட திரை உலகில் நடிகர், நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகை ராகிணி திவேதியும் கைதாகி உள்ளார். போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகைகள் 2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது கன்னட திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகை சஞ்சனா கல்ராணி கைதாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சஞ்சனா கல்ராணியின் உண்மையான பெயர் அர்ச்சனா கல்ராணி ஆகும். அவர், சினிமா துறையில் நடிக்க வந்ததால் தனது பெயரை சஞ்சனா கல்ராணி என்று மாற்றி இருந்தார். சஞ்சனா கல்ராணி தமிழில் பிரபல நடிகையாக இருந்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். சஞ்சனா கல்ராணி, கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் பெங்களூரு 23, மண்டியா டூ மும்பை, ஆட்டோ கிராப் ப்ளஸ், அர்ஜூன், ராம்லீலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் “ஒரு காதல் செய்வீர்” என்ற படத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story