குணமடைவோர் அதிகரிப்பு: ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை


குணமடைவோர் அதிகரிப்பு: ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 8 Sep 2020 9:18 PM GMT (Updated: 8 Sep 2020 9:18 PM GMT)

புதுவையில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 440 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 446 பேர் குணமடைந்து உள்ளனர்.

புதுவையில் கடந்த 4-ந்தேதி 1,846 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுவே அதிகபட்ச சோதனையாக இருந்தது. ஆனால் தற்போது மத்தியக்குழு சோதனையை அதிகரிக்க வலியுறுத்தியதை தொடர்ந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 81 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களைவிட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

12 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 85 ஆயிரத்து 906 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 66 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 17 ஆயிரத்து 749 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 831 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

அதாவது 1,775 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 56 பேர் வீடுகளில் தனிமைப்படுத்துப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 ஆயிரத்து 581 பேர் குணமடைந்துள்ளனர். 337 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குணமடைந்தோர் விகிதம்

புதுவை மாநிலத்தில் இதுவரை இறந்தவர்களில் 285 பேர் புதுச்சேரியையும், 19 பேர் காரைக்காலையும், 32 பேர் ஏனாம் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர். மாகி பகுதியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. புதுவையில் உயிரிழப்பு என்பது 1.90 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 70.88 ஆகவும் உள்ளது.

Next Story