பரங்கிமலை-சென்டிரல் இடையேயான 2-வது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை


பரங்கிமலை-சென்டிரல் இடையேயான 2-வது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை
x
தினத்தந்தி 8 Sep 2020 9:45 PM GMT (Updated: 8 Sep 2020 9:45 PM GMT)

பரங்கிமலை - சென்டிரல் இடையேயான 2-வது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக முடங்கி கிடந்த சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையேயான முதல் வழித்தடத்தில் மட்டும் போக்குவரத்து தொடங்கியது. முதல் நாள் என்பதால் குறைவான பயணிகள் வந்ததால், பெரும்பாலான ரெயில் நிலையங்கள் வெறிச்சோடி கிடந்தன. முதல் நாளில் மட்டும் 5 ஆயிரத்து 33 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதில் 4 ஆயிரத்து 869 பயணிகள் பயண அட்டை (‘ஸ்மார்ட் கார்டு’) உதவியுடனும், 164 பேர் மெட்ரோ ரெயில் செயலி மூலம் தங்களுடைய செல்போன் எண்ணுக்கு வந்த ‘கியூ.ஆர்.’ கோடு குறியீடு டிக்கெட் மூலமும் பயணம் செய்தனர். குறிப்பாக விமானநிலையம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, எல்.ஐ.சி., சென்டிரல் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் ஓரளவு பயணிகளின் கூட்டம் இருந்தது. 2-வது நாளாக நேற்று மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

2-வது வழித்தடத்தில் சேவை

சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பரங்கிமலை - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ ரெயில் நிலையம் இடையேயான 2-வது வழித்தடத்தில் இன்று (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது. காலை 7 முதல் இரவு 8 மணி வரை சென்டிரலில் இருந்து பரங்கிமலைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்டிரலுக்கும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும் இயக்கப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நிறுத்தும் நேரமும் 20 வினாடிகளில் இருந்து 50 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

டோக்கன் முறை

விடை பெறுகிறது

பயணிகள் பாதுகாப்பான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்ட்டர்களில் ‘ஸ்மார்ட்’ கார்டு, ‘கியூ.ஆர்.’ கோடு குறியீடு முறையில் டிக்கெட் பெற்றுக்கொள்ளவும் பயணிகள் வலியுறுத்தப்பட உள்ளனர். படிப்படியாக டோக்கன் டிக்கெட் முறைக்கு விடை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள பயண அட்டையை பரிசோதிக்கும் ‘ரீடர்’ எந்திரங்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story